ஈரோட்டில் பரவலாக மழை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அணைப்பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு;
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடிகொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.47 அடியாக குறைந்துள்ளது. நேற்று இரவு பவானிசாகர் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காலிங்கராயன், தடப்படி அரக்கன் கோட்டை பாசனங்களுக்கு திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.66 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.75 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.45 அடியாக உள்ளது.