தப்பி ஓடிய ரவுடி கால் எலும்பு முறிவு
மயிலாடுதுறையில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ரவுடி தடுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு:- ;

மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபாயம் என்கிற சுதர்சன்(27). பிரபல ரவுடியான இவர் மீது 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இவர்மீது வாரண்டுகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த சுதர்சனை கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகே மயிலாடுதுறை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற சுதர்சனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அதனை அறிந்த சுதர்சன் அங்கிருந்து தப்பி ஓடிய போது தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து சுதர்சனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.