ஒற்றை யானையால் பரபரப்பு
பண்ணாரி அம்மன் கோவில் அருகே இன்று காலை சாலையோரம் நின்ற ஒற்றை யானையால் பரபரப்பு;

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவிலை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுவாக பண்ணாரி சோதனை சாவடி அருகே சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இன்றைக்கு குண்டம் திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியில் ரோந்து பணியை ஏற்படுத்தி இருந்தனர்.இந்நிலையில் இன்று காலை பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்து நின்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றும் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் அந்த சாலையில் நின்ற ஒற்றை அணை பின்னர் மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அந்த வழியாக போக்குவரத்திற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.