கோவை: உடல் ஊனத்தை பற்றி தரக் குறைவாக பேசுவதாக புகார் !

மாற்றுத் திறனாளிகள், சக குடியிருப்புவாசிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர்.;

Update: 2025-04-22 06:01 GMT
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், சக குடியிருப்புவாசிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, குடியிருப்புகளில் தனிநபர் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அப்போது மற்றவர்கள் தங்களை இழிவாக பேசுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு என பிரத்தியேக குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும், மேலும் தங்களை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மாற்றுத் திறனாளிகள் வெயிலில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் வந்து மனு பெற்ற பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News