உளுந்துார்பேட்டை செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி கனிமொழி,37; விவசாய கூலி தொழிலாளி. இவர், கடந்த ஜன., 22ம் தேதி இரவு துாங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரது கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து அவர் அளித்த புகாரில், எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கடந்த 16ம் தேதி, எலவனாசூர்கோட்டை அருகே தஞ்சாவூர் மாவட்டம் முனியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 60; என்பவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி தாலுகா சித்தாத்துார் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் வைத்தீஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள், 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:30 மணிக்கு உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் டி.எஸ்.பி., பிரதீப்பிடம், முருகேசன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி மனு அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டி.எஸ்.பி., உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.