உளுந்துார்பேட்டை பகுதியில் மணல், கூழாங்கற்கள், வண்டல் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்து வருவதால் இச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மணல் லாரி மற்றும் திருவிழாவில் ராட்டினம் அனுமதிக்கு பணம் வாங்கியதாக உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.. அலுவலகத்தில் பணிபுரிந்த 2 போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., பிரதீப், மணல், கூழாங்கற்கள் கடத்துவோரிடம் எப்படி பணம் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணல் லாரி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை தான் ஓட்டுவேன் என கூறுவார்கள், ஆனால் அதற்கு மேல் அதிகமாக ஓட்டுவார்கள். எனவே, மினிமம் 5,000 ரூபாய் டி.எஸ்.பி.,க்கு எனவும், உங்களுக்கு 1000 ரூபாய் எனவும் கேட்டு வசூலிக்க வேண்டும் என தனக்கு கீழ் வேலை செய்யும் போலீசாருக்கு உத்தரவிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி., ஆஸ்ராகர்க் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., பிரதீப்பை நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.