ஈரோட்டில் அடுத்த மாதம் வேளாண் கண்காட்சி
ஈரோட்டில் அடுத்த மாதம் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு;
ஈரோட்டில் அடுத்த மாதம் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சி.என். கல்லூரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு இடையே நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியில் அரசு துறைகளின் சார்பில் 70 அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் சார்பில் (உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உட்பட) 130 அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.நாள் ஒன்றுக்கு 5,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீனரக மற்றும் பாரம்பரிய விதைகள், பழச்செடிகள், குழித்தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் அங்கக இடுபொருட்கள், நவீன வேளாண் இயந்திரங்கள் நுண்ணீர் பாசன உபகரணங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுவதோடு, விற்பனையும் செய்யப்படவுள்ளது. மேலும், இ -வாடகை, உழவன் செயலி, வேளாண் அடுக்ககத்தில் விவசாயிகளுக்கான பதிவு போன்ற சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், சி.என்.கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வேளாண்மைத்துறையின் சார்பில், நாட்டு ரக விதைகள், பயிர் வகைகள், அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்கள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள், தளவாட பொருட்கள், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், நாட்டின மாடுகள், காங்கேயம் காளைகள், வேளாண் விற்பனை, வணிகத்துறையின் சார்பில் வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மீன்வளத்துறையின் சார்பில், மீன் இரகங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் குழு சார்பில், இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை அதிகளவில் காட்சிப்படுத்துவதோடு, அதன் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குரு சரஸ்வதி, செயலாளர் /துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மனோகர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.