நிறத்திற்காகவும், சுவைக்காகவும் செயற்கை ரசாயன கலப்படம் செய்யப்படவில்லை

பொதுமக்கள் புரளியை நம்பாமல் தர்பூசணி பழங்களை சாப்பிடலாம் - தோட்டக்கலைத்துறை உறுதி;

Update: 2025-05-16 06:08 GMT
தக்காளி, சிவப்பு கொய்யா, பப்பாளி ஆகிய பழங்களில் உள்ளதை போன்று தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே சிவப்பு நிறம் உள்ளது. எனவே, மக்கள் புரளியை நம்பாமல் தயக்கமின்றி சாப்பிடலாம் என தோட்டக்கலைத்துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து, நாகப்பட்டினம் தோட்டக்கலைத் துறை இயக்குநர் சிவ.பரிமேலழகன் கூறியதாவது தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியுள்ளது. இதையடுத்து, தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில், தோட்டக்கலை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், தர்பூசணி பழத்தில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், செயற்கை ரசாயனம் கலப்படம் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. தக்காளி, சிவப்பு கொய்யா போன்ற பழங்களில் இருப்பது போலவே, இயற்கையாகவே தர்பூசணி பழத்தில் லைகோபீன் எனப்படும் சிவப்பு நிறம் உள்ளது. தர்பூசணியில் நீர் சத்து, வைட்டமின் சி, பி6 போன்ற உயிர்ச்சத்துகளும், பொட்டாசியம், மெக்னீசியம். கால்சியம், இரும்பு சத்து போன்ற தாது உப்புகளும் உள்ளன. எனவே, மக்கள் புரளியை நம்பாமல் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News