திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
8 பைரவர்களுக்கு மகா அபிஷேகம் - தீபாராதனை - 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு;
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில், அஷ்ட பைரவர் தலமாக விளங்கும் ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில், காசிக்கு அடுத்தபடியாக, சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் ஆகிய 8 பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மஹா யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் புனித நீர் கொண்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.