விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், குடகனாற்றில் இருந்து தண்ணீரை பிள்ளையார்நத்தம் கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், கொடைக்கானல் வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) பாண்டியன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) உமா, செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு) பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.