குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த கேரளா பகுதி தெக்கே கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரோபின் (35). பட்டதாரியான இவரை அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 22ஆம் தேதி கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். அவரை வழக்கிலிருந்து விடுவிக்க தேமுதிக பிரமுகர் செல்வர்ட் என்பவர் பணம் பெற்றதாக அவரது அக்கா ரீனா (42) என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேமுதிக பிரமுகர் செல்வர்ட் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தொடக்கத்தில் இருந்தே காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை வழக்குப் பதிவில் குளறுபடிகள் உள்ளன என்று எஸ் பி ஸ்டாலினுக்கு புகார்கள் சென்றன. எந்த நிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஜானகியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் திடீர் உத்தரவிட்டார். மேலும் தேமுதிக பிரமுகர் கைது விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மேல்விசாரணை நடத்தவும் எஸ் பி உத்தரவிட்டு உள்ளார்.