சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய திருநங்கைகள்
போலீசார் வழக்கு பதிவு;
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). இவர், 4 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கோவையில் இருந்து சேலத்திற்கு வந்த தனது குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று காத்திருந்தார். அப்போது, பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் அருகே ஆவின் பாலகம் அருகில் பஸ்கள் உள்ளே நுழையும் பகுதியில் பழனிசாமி சிறுநீர் கழிப்பதற்காக சென்றார். அங்கு நின்ற திருநங்கைகள் சிலர் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். இதையடுத்து பழனிசாமிக்கும், திருநங்கைகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த அவர்கள், அவரை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில், பழனிசாமியின் சட்டை கிழிந்ததோடு அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பழனிசாமியை தாக்கிய திருநங்கைகள் யார்? எதற்காக அவர்கள் தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.