சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டி காடு முத்து கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 43). நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோபாலுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் சாந்தி கோபித்து கொண்டு சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.