குப்பைக்கு தீ வைத்ததில் யோகா மையத்தில் பரவிய தீ
சாலை ஓரத்தில் இருந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் யோகா மையம் மற்றும் வீடு தீப்பற்றியது.;
குமாரபாளையம், குள்ளங்காடு, பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 45. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் யோகா மையம் நடத்த முருகன்,34, என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். ஜெயக்குமார் வீட்டின் முன்பு குப்பைகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டு இருந்தன. அதனை நேற்று காலை 06:00 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைக்க, அந்த தீ, யோகா மையத்தின் மீது பரவி, அருகில் உள்ள வீட்டிலும் பரவியது. இதில் யோகா மையம், பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த இரண்டு டூவீலர்கள், வீட்டின் பாத்திரங்கள் சேதமானதுடன், வீட்டின் ஜன்னலில் உள்ள கண்ணாடிகளும் உடைந்தன. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர். இதில் பக்கத்துக்கு வீட்டில் இருந்த உடைமைகள்,சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு இரண்டு சக்கர வாகனங்கள் ஆகியவை தீயில் சேதமானது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.