தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை மாணவர்கள் வருநர் விழா
பல்கலைக்கழகம்;
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை மற்றும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடத்தும் வருநர் விழவு 2025 (Freshers Welcome Ceremony - 2025) வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் த.க.கோ. நீலமேகம் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். உலகத்திலேயே முதன்முதலாக மொழிக்காகத் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பதை எடுத்துக்கூறி இலக்கியத்துறைத் தலைவர், பேராசிரியர் ஜெ.தேவி இலக்கியத்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர்கள், வகுப்பெடுக்கும் பேராசிரியர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரையாற்றினார். துணைவேந்தர்(பொ) குழு உறுப்பினர் ஆட்சிக்குழு உறுப்பினர் சி.அமுதா மாணவர்களின் எதிர்காலம் பற்றி பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் புதல்வர்கள் இனி எங்கள் பிள்ளைகள் அவர்களுக்கான கல்வியினை வழங்குவதில் எங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று உறுதி கூறினார்கள். பின்னர் துணைவேந்தர் குழு உறுப்பினரும் மரு பெ.பாரதஜோதி கல்வி பெறும் வாய்ப்பினைப் பெற்ற மாணவர்களின் கற்ற கல்வி தன்னையும், தன் குடும்பத்தையும், தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்த வேண்டும் என்றார். பதிவாளர்(பொ) கோ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினருமான த.க.கோ. நீலமேகம் சிறப்புரையாற்றினார்கள். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு வாகனம் நிறுத்தும் இடம் அமைத்துத் தந்ததைப்போல தற்போது ஆடவர் விடுதியில் உருவாக்க ரூ.10,00,000/- தொகையினை வழங்கினார்கள். திராவிட ஆட்சியில் மாணவர் நலனுக்காக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி கல்வியின் சிறப்புகளை உணர்ந்து செயல்படுகிறது என்பதை நன்கு உணர்த்தினார்கள். இலக்கியத்துறைப் பேராசிரியர் பெ இளையாப்பிள்ளை, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆ.துளசேந்திரன், இலக்கியத்துறையின் இணைப்பேராசிரியர் அ.இரவிச்சந்திரன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் இணைப் பேராசிரியர் ஞா.பழனிவேலு, நூலகர் சி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் மா. பவானி நன்றி கூறினார். ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாமாண்டு இலக்கியத்துறை மாணவர் சு.வசந்த் தொகுப்புரை வழங்கினார்.