திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
உயிரிழப்பு;
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் யு.பாலமுருகன் (40). இவர் வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்று வழிபட்டார். பின்னர், குறுக்கு வழியில் கல்யாணபுரத்துக்கு செல்வதற்காக குடமுருட்டி ஆற்றில் வீரசிங்கம்பேட்டை படுக்கை அணை மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் தவறி விழுந்த இவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தேடிய நிலையில், பாலமுருகன் திருச்சோற்றுத்துறையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடலை நடுக்காவேரி காவல் நிலையத்தினர் மீட்டு உடற் கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்