ஆட்டோ டிரைவர்கள் மோதல்; போலீசார் விசாரணை
திருச்செந்தூரில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்செந்தூரில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் எண்ணிக்கையை போலவே ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் திருச்செந்தூர் பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதில் இரு தரப்பு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் ஆட்டோ டிரைவர்களின் சண்டையை தடுத்து சமாதானம் ஏற்படுத்த முயன்றனர். இது குறித்து தகவலறிந்த திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன், தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார், மோதலை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக இருதரப்பு ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.