குமரி : அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடிப் பிறப்பு;

Update: 2025-07-17 08:24 GMT
ஆடி பிறப்பையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன்பிறகு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

Similar News