பவுஞ்சூர் தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பவுஞ்சூர் தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்;
செய்யூர் அடுத்த மடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 35; விவசாயி. இவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக தர்ப்பூசணி விவசாயம் செய்து வந்தார். உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.கடந்தாண்டு, 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, தர்ப்பூசணி பயிரிட்டார். அறுவடை நேரத்தில் தர்ப்பூசணியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால், தர்ப்பூசணி விற்பனையாகாமல் வயல்வெளியில் வீணானது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த லோகநாதன், கடந்த 8ம் தேதி, வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தர்ப்பூசணி விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட லோகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பவுஞ்சூர் தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன், விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.