திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம்

வேளாண்மைத்துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்.;

Update: 2025-08-02 12:13 GMT
வேளாண்மைத் துறை சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொண்டு மாநிலஅளவில் முதலிடம் பெறும் விவசாயிக்குரூ.5 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளின்படி போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் குறைந்தப்பட்சம் 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஓரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3 ஆண்டுகளுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநருக்;கு தெரிவிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை, வேளாண்மை இயக்குநர் தலைமையிலான, மாநில அளவிலான குழு இறுதிமுடிவு எடுக்கும். எனவே விருதுநகர் மாவட்டத்தில், திருந்திய நெல் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைய சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News