தஞ்சாவூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நிவாரண உதவி வழங்கல்
குறைதீர் கூட்டம்;
தஞ்சாவூரில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 440 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் சார்ந்த திருப்பாலத்துறை கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன் என்பவர் குடமுருட்டி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் பெ.மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.