வலங்கைமானில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் விரைவில் திறக்கப்பட உள்ளது
வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் 1.93 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.;
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த திருமண மண்டபத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் ரூபாய் ஒரு கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான திருக்கோயில் நிதி மூலம் தரைத் தளம் மற்றும் மேல் தளத்துடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுற்றதை அடுத்து விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.