வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒன்று சேர்ந்தால் வெற்றி
ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்;
சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். எனக்கு எந்த ஆசையும் இல்லை. அரசியலில் உச்சபட்ச பதவியான முதல்-அமைச்சர் பதவியை 3 முறை ஜெயலலிதா எனக்கு வழங்கி உள்ளார். 13 ஆண்டுகள் பொருளாளராக இருந்தேன். இன்று வரை அ.தி.மு.க. தொண்டனாக இருக்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ்பாடும் இயக்கமாக அ.தி.மு.க. இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இலக்கு கிடையாது. ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார். ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றினார். எனவே அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. அதற்குள் பல சூழ்நிலைகள் மாறும். அ.தி.மு.க. கட்சியின் சட்ட விதிகள் கேலிக்கூத்தாக இருக்கிறது. அ.தி.மு.க.வை யாரும் பிளவுபடுத்த முடியாது. கடந்த 4½ ஆண்டு தி.மு.க. அரசின் செயல்பாடுகள், தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க. தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. அந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்துக்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.