ஏற்காட்டில் மரக்கட்டைகளை லாரியில் அடுக்க தூக்கிய போது கிரேன் கவிழ்ந்து ஆபரேட்டர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-08-27 09:16 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் தாமோதரன் (வயது 31). கிரேன் ஆபரேட்டர். இவர் நேற்று சேலம் ஏற்காடு கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் வெட்டப்பட்ட மரக்கட்டைகளை கிரேன் மூலம் தூக்கி லாரியில் அடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 1 மணி அளவில் மரக்கட்டைகளை கிரேன் மூலம் அவர் தூக்கி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கிரேன் பின்னோக்கி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 20 அடி பள்ளத்தில் கிரேன் கவிழ்ந்தது. இதில் கிரேனுக்கு அடியில் சிக்கிய ஆபரேட்டர் தாமோதரன் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் கவிழ்ந்து ஆபரேட்டர் பலியான சம்பவம் கொட்டச்சேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தாமோதரனுக்கு நிஷா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Similar News