தனியார் கல் குவாரிகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், தடுப்பு வேலி அமைக்க வேண்டுகோள்

தனியார் கல் குவாரிகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், தடுப்பு வேலி அமைக்க வேண்டுகோள்;

Update: 2025-09-23 11:58 GMT
சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவம்பாக்கம், ஓணம்பாக்கம், தொன்னாடு உள்ளிட்ட பல கிராமங்களில், கடந்த ஆண்டுகளில் அரசு அனுமதி பெற்று தனியார் கல் குவாரிகள் இயங்கின. கல் குவாரிக்கான அனுமதிக் காலம் முடிந்ததால், அவை தற்போது கைவிடப்பட்ட கல் குவாரிகளாக மாறி, பயன்பாடின்றி அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கைவிடப்பட்ட கல் குவாரிகள், 250 அடி ஆழத்திற்கும் அதிக பள்ளம் கொண்டதாக உள்ளன.இப்பள்ளங்களைச் சுற்றிலும் எவ்வித தடுப்புகளும், வேலிகளும் இல்லாததால், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதனால், மலை மற்றும் மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், இந்த கல் குவாரி பள்ளம் அருகே செல்லும் போது மண் சரிந்து, பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழக்கின்றன. தடுப்பு வேலி அமைக்க பலமுறை வலியுறுத்தி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முள் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Similar News