கோம்பையன்பட்டி பகுதியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் அருகே கோம்பையன்பட்டி பகுதியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 3000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அரை கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள மீன்களை பிடித்துச் சென்றனர்;
திண்டுக்கல் மாவட்டம் கோம்பையன்பட்டி பகுதியில் உள்ளது. அனைகுளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் கடந்த வருடம் பெய்த மழையின் காரணமாக முழு கொள்ளளவு எட்டியது. இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த வருடம் குளத்தில் மீன்கள் வாங்கி விடப்பட்டது. தற்பொழுது குளத்தில் நீர் வற்றிய நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை கோம்பை யான்பட்டி பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று விநாயகர் கோவிலில் வழிபட்ட பொதுமக்கள் பின்னர் குளக்கரையில் அமைந்திருக்கும் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதனை அடுத்து மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் வலை, ஊத்தா போன்றவற்றால் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி போன்ற மீன்களை 30 கிராமங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். இன்று நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் அரை கிலோ முதல் 5 கிலோ வரையிலான பல்வேறு வகை மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தன.