போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தர்மபுரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி;
தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தர்மபுரியில் இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி கவர்னர் சிவசுந்தரம், துணை கவர்னர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் வரவேற்றார். இந்த போட்டிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தீபா சில்க்ஸ் உரிமையாளர் தியாகராஜன், எலைட் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மணிமாறன், செயலாளர் டாக்டர் ஜீவன், பொருளாளர் ராஜா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் லோகேஷ் முதலிடத்தையும், சந்தோஷ் குமார் இரண்டாம் இடத்தையும், பூவரசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோன்று பெண்கள் பிரிவில் கௌரி முதலிடத்தையும், இளவரசி இரண்டாம் இடத்தையும், கொடிலா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று ஒவ்வொரு பிரிவுக்கும் 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு தர்மபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.