திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை மும்முரம்!
கார்த்திகை தீப திருநாளுக்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால், விளக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
சிவபெருமான், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னியாக தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அந்நாள், கார்த்திகை தீப பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வணிக நிறுவனங்கள்,லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் லாரி ஒர்க் ஷாப் என அனைத்து பகுதிகளிலும் தீபம் ஏற்றி அனைவரும் கொண்டாடுகின்றனர். நாமக்கல் சுற்று வட்டாரத்தில் அகல் விளக்கு தயாரிப்போா் உள்ளனா். இவா்கள் பருவமழைக்கு முன்பு உற்பத்தியை செய்து முடித்தனா். கடந்த சில நாள்களாக அகல் விளக்குகள் சந்தைக்கு வரத் தொடங்கின.மேலும் சேலம் , கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு வடிவங்களில் தயாரித்து, வண்ணம் பூசி அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.இவற்றை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.அகல் விளக்குகளில் பாவை விளக்கு, தாமரை விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, தேங்காய் விளக்கு, சூலாயுத விளக்கு, கோபுர விளக்கு, ஒளி விளக்கு,யானை விளக்கு,விநாயகர் உருவத்துடன் கூடிய பஞ்சமுக விளக்கு பொம்மையின் கையில் விளக்கு, சிறிய பறவை கூட்டில் விளக்கு, சிறிய கண்ணாடி பொருத்தப்பட்ட லாந்தர் விளக்குகள் என விதவிதமான விளக்குகள் விற்பனையாகின்றன. இவை ரூபாய் 2 முதல் 200 வரையிலான விலைகளில் விற்கப்படுகின்றன.வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்காக பொதுமக்கள் ஆர்வமுடன் விளக்குகளை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர்.