கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள வெள்ளியாவிளை ஜங்சனில் பேருந்து ஏற நிற்கும் பயணிகள் வசதிக்காக மின்வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும், பொன்னறை (குன்னுவிளை) ஸ்ரீவனசாஸ்தா கோவில் அருகில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு சிறு மின்விசை குடிநீர் திட்டம் ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து செய்து தரவேண்டும் என்று இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள் ஆகியோர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து . வெள்ளியாவிளை ஜங்சனில் மின்வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 6 – லட்சமும், பொன்னறை (குன்னுவிளை) ஸ்ரீவனசாஸ்தா கோவில் அருகில் சிறு மின்விசை குடிநீர் திட்டம் அமைக்க ரூ. 4 - லட்சமும் என மொத்தம் ரூ. 10 - லட்சம் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஓதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து பயணிகள் நிழற்குடை, சிறு மின்விசை குடிநீர் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.