பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.15 லட்சம் இழந்ததால் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அருகே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அருகே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த வடக்கு காரசேரியைச் சேர்ந்தவர் வீரசங்கிலி. இவருடைய மகன் மணிகண்டன் (35). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினர் மூலம் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்து அறிந்து கொண்டார். தொடர்ந்து அவர் அதில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு லாபம் கிடைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட தொடங்கி உள்ளது. சுமார் 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் காலையில் வடக்கு காரசேரி பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றார். அவர் அங்கு வைத்து திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.