கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் மூவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அனுமதி
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் மூவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அனுமதி;
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் மூன்று பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28), என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட மூன்று பேரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் போலீஸ் காவல் முடிந்து வரும் ஜன. 2ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர்.