மல்லூர் அருகே நண்பர்களுடன் விளையாட சென்ற 3-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-05-21 13:14 GMT
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி தண்ணீர் டேங்க் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், நிஷாந்த் (வயது 8) என்ற மகனும் இருந்தனர். இதில் நிஷாந்த் நிலவாரப்பட்டி அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் காலை நிஷாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்றுள்ளான். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் நிஷாந்த் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சக்திவேலின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மதியம் சிறுவன் நிஷாந்த் பிணமாக மிதந்தான். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி சிறுவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் மல்லூர் போலீசார் நிஷாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து, மூழ்கி சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News