சேலத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான 3 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் தாதகாப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 37). கொலை முயற்சி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை பிடித்து ஒப்படைக்கும்படி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அன்னதானப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த பூபதியை போலீசார் நேற்று பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இதேபோல் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்ராஜா (34) என்பவரும், சேலம் மணியனூரை சேர்ந்த முருகன் (41) என்பவரும் தலைமறைவாகினர். இவர்கள் 2 பேருக்கும் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த சுரேஷ்ராஜாவையும், தலைமறைவாக இருந்த முருகனையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.