திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 5.15 கோடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாத உண்டியல் மூலம் 2.3 கிலோ தங்கம், ரூ. 5.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2024-09-25 06:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில், கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் சு.ஞானசேகரன் முன்னிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ. 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834, தங்கம் 2 கிலோ 352 கிராம், வெள்ளி 41 கிலோ 998 கிராம், பித்தளை 61 கிலோ 600 கிராம், செம்பு 5 கிலோ 129 கிராம், தகரம் 13 கிலோ 739 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1589-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. இதே போல உண்டியலில் ரூ. 1 நாணயங்களால் கோர்க்கப்பட்ட காசு மாலையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில், தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் சிவலோகநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News