இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட 6 இலட்சம் வரை மானியம்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.39 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-08-25 13:51 GMT
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.39 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேளாண் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பை முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் உழவர் பெருமக்களுக்கு உதவியாக இருந்து வேளாண் உற்பத்தியினை உயர்த்திடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று 2025-26 ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 எண்கள் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.39 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இதற்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்கள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பும் ஏற்படும். இந்த திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மையங்களை சிறப்பாக நடத்தும் வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளின் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சியும் அளிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், இத்திட்டத்தில் மானிய உதவி https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அரசின் உதவியுடன் துவங்கப்படும் இந்த திட்டம் சுயதொழில் என்பதால் இந்த வாய்ப்பினை வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News