திருச்செந்தூரில் 60 அடி தூரம்கடல் உள்வாங்கியது
அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் நேற்று கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடையே கடல் பகுதி உள்ளது. அங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுநாளில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நேற்று அமாவாசை தினம் என்பதால் காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. எனினும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது.