இலங்கைக்கு கடத்த முயன்ற 75லட்சம் மருந்து பொருட்கள் பறிமுதல்

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்;

Update: 2025-07-13 13:10 GMT
காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையில் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் இருந்து 3 பேர் தப்பி ஓடி விட்டனர். அந்த லாரியில் 35 கிலோ வீதம் 54 மூடைகளில் சுக்கு, 65 பெட்டிகளில் மருந்து மாத்திரைகள் இருந்தது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். அந்த லாரியை ஓட்டி வந்த மூலக்கரை பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துக்குமார் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Similar News