சுடுகாடு அருகே பிணமாக கிடந்த மாநகராட்சி டிரைவர் 

கன்னியாகுமரி மாவட்டம், ஆனந்த பத்மநாபபுரம் பகுதியில் மாநகராட்சி குப்பை வண்டி டிரைவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-22 10:47 GMT

சடலம் கண்டெடுப்பு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அடுத்த ஆனந்த பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்பவரது மகன் விஜய் (24). நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. விஜய்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவ தினம் மதியம் விஜய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது விஜய் இடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சத்யா கூறியுள்ளார். அப்போது கிளம்பி செல்ல தயாராக இருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்ற விஜய் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது செல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சத்யா பல இடங்களிலும் கணவரை தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெள்ளமடம் - குலசேகரபுரம் புதூர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவம் விரைந்து சென்று விசாரித்த போது, இறந்து கிடந்தவர் விஜய் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணம் ஏற்பாடு செய்ய முடியாத சோகத்தில் விஜய் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News