தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்லில் தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-08 17:49 GMT

சட்ட தன்னார்வலர் 

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, புதுடில்லி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, சென்னை உத்திரவுபடி மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ,

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் 50 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு, ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், MSW மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வி அறிவுள்ளவர்கள், கணினி அறிவுள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விருப்பம் உள்ளவர்கள் https://namakkal.dcourts.gov.in/ என்ற நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வருகிற மே-15-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம், ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.இது தொடர்பாக மேலும் விவரம் அறிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News