மதக்கலவரத்தை தூண்டும் முயற்சி : பா.ஜ.க.வினர் மீது காவல்துறையில் புகார்

தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.;

Update: 2023-12-14 01:39 GMT

புகார் அளிக்க வந்த திமுகவினர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை வந்த ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 34 பேருக்கும் கோவில் காவலர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பு மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் மீது கோவில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

இந்த நிலையில் 34 ஐயப்ப பக்தர்களும் வேண்டுமென்றே கூச்சலிட்டவாறு கோவில் உண்டியலை தட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவர்களை கோவில் ஊழியர்கள் அமைதிப்படுத்த முயற்சித்த போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையிலே வேண்டுமென்றே அவர்கள் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எனவே அய்யப்ப பக்தர்கள் 34 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டு உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் உள்ளிட்ட பலவற்றில் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண், மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, ஸ்ரீரங்கம் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன், மணிகண்டம் அமைப்பாளர் அழகேசன், மாநகர விவசாய அணி அப்துல் ரகுமான், அந்தநல்லூர் தகவல் தொழில் நுட்ப அணி பரத், உறையூர் ரகு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்...

Tags:    

Similar News