காந்திஜி, திருவள்ளுவர் வணிக வளாகங்களில் கடைகள் ஏலம் ரத்து

தஞ்சை காந்திஜி, திருவள்ளுவர் வணிக வளாகங்களில் கடைகள் ஏலம் ரத்து என மாமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-26 09:31 GMT
மாநகராட்சி கூட்டம்

தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாகங்களில்  கடைகளுக்கு விடப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாமன்றக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர். மகேஸ்வரி முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்: கே.மணிகண்டன் (அதிமுக): தஞ்சாவூர் மாநகரில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மாநகரம் முழுவதும் குப்பைகள் அள்ளப்படாததால்,

மக்கள் அவதிப்படுகின்றனர். ஒப்பந்ததாரர் முறையாக செயல்படுவதில்லை என ஏற்கெனவே தெரிவித்தோம். அதன் பின்னரும் இப்பிரச்சனை தொடருவதால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாகத்தில் ஏலம் மீண்டும் விடப்படுவது ஏன்? மேயர்: குப்பை பிரச்சனை தொடர்பாக ஒப்பந்ததாரரை ஆணையர் அழைத்துப் பேசி, இதுதான் கடைசி வாய்ப்பு என கடும் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆணையர்: பணியாளர்கள், வண்டிகள் பிரச்சனை என்றும், இவற்றைத் தயார் செய்துவிடுவதாகவும் ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இதற்கு ஒரு மாதம் வரை அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னரும் இப்பிரச்சனை தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாகத்தில் விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததால், நகராட்சி நிர்வாக ஆணையரின் ஆலோசனைப்படி விதி எண் 316-ன் படி ஆய்வு செய்து, விதி எண் 317}ன் படி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஏலம் விடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, ஏலத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், ஏற்கெனவே ஏலம் எடுத்து முறைகேடு செய்தவர்கள் மறு ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளது பற்றியும் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக மேயரும், திமுக உறுப்பினர்கள் தி. புண்ணியமூர்த்தி, எஸ்.சி. மேத்தா உள்ளிட்டோரும் பதில் அளிக்கும்போது, அதிமுக } திமுக உறுப்பினர்களிடையே இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது. ஆணையர்: தொடர்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணிகண்டன்: மீண்டும் நடத்தப்படவுள்ள ஏலத்தில் ஏற்கெனவே ஏலம் எடுத்தவர்கள் கலந்து கொண்டால், நீதிமன்றத்தை அணுகுவோம். பி. ஜெய்சதீஷ் (பாஜக): வார்டு சபைக் கூட்டத்துக்கு தொடர்புடைய அலுவலர்கள் வராமல், தொடர்பில்லாத அலுவலர்கள் வருவதால், அவர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. மனுக்களை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். மேயர்: மனுக்கள் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ. காந்திமதி (அதிமுக): ராணி வாய்க்கால் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொய்வாக உள்ளது. ஆணையர்: பர்மா பஜார் கடை வியாபாரிகள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இவர்களுக்குக் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியரிடம் பேசி, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பதாகை ஏந்தி வந்த உறுப்பினர்: எனது வார்டில் (20) குடிநீர் வராததால், மக்கள் கடுமையாகத் திட்டுகின்றனர் எனக் கூறி நல்லா இருந்த தஞ்சாவூரை நாசமாக்கிய ஊதா பைப்பு என எழுதப்பட்ட பதாகையை அதிமுக உறுப்பினர் என். சரவணன் ஏந்தி வந்தார். மேயர்: மாநகரில் எங்குமே குடிநீர் பிரச்னை இல்லை. உங்களது வார்டுக்கு வியாழக்கிழமை அலுவலர்களை அனுப்பி, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags:    

Similar News