கன்னியாகுமரியில் 6 மணி நேரம் படகு போக்குவரத்து பாதிப்பு

விவேகானந்தர் சிலைகளை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில் கடல் சீற்றத்தால் படகுகள் இயக்க வில்லை

Update: 2023-12-28 14:32 GMT
கன்னியாகுமரி படகு தளம்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று நடந்த நிலையில், இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்திற்காக சென்ற ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் வந்து பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் கன்னியாகுமரியில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில்  காணப்பட்டது.        

இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் மற்றும் விவேகானந்தர் சிலைகளை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்தனர். காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து துவங்கவில்லை. காரணம் இன்று காலை முதலே கடலில் அலை அதிகமாக காணப்பட்டது. அலையின் வேகத்தால் படகுகள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் சிலை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரையில் காத்திருந்தனர். சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின், அதாவது பிற்பகலில் அலையின் வேகம் கட்டுப்பாட்டில் வந்த பிறகு விவேகானந்தர் சிலைக்கு படகுகள் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News