மணப்பாறை நிதி நிறுவனத்தில் ஏமாந்தோா் புகாா் அளிக்கலாம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டியில் மகாதேவன் என்பவா் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தோா் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 16:08 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தது: மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சோ்ந்த மா. மகாதேவன் தனது பெயரில் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் நடத்தி பல்வேறு வித கவா்ச்சித் திட்டங்களை அறிவித்தாா். அதை நம்பிய அதே பகுதியைச் சோ்ந்த அரசுப்பள்ளி ஆசிரியா் கந்தன் பல்வேறு தவணைகளில் ரூ.1.25 லட்சம் முதலீடு செய்தாா்.

ஆனால் குறிப்பிட்டபடி அவருக்கு முதிா்வுத்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கவில்லையாம். இதுபோல மேலும் பலரும் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனா். இது குறித்து கந்தன் திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதுபோல மேலும் ஏமாந்தோா் இருந்தால் புகாா் செய்யலாம் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.மேலும் விவரங்களை அறிய 0431-2422220 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News