சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை - அசனவிருந்து
Update: 2023-12-04 08:06 GMT
அசைவ விருந்து
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 149-ம் ஆண்டு பிரதிஷ்டை மற்றும் மறு பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு திரு விருந்து ஆராதனையை ஆயர் ஜவகர் வில்சன் ஆசீட் டேவிட் நடத்தினார். தொடர்ந்து மதியம் அசனவிருந்து வழங்கப்பட்டது. இதில், கிறிஸ்துநாதர் ஆலய ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர்டேவிட் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்து அசன விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆலய வளாகத்தில் சீயோன் ஹாலில் பொது மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதற்காக 750 கிலோ அரிசியும், 1000 கிலோ ஆட்டு இறைச்சியும் சமைத்து சாப்பாடு, கறிகுழம்பு, சாம்பார், ரசம், மோர், பாயாசம் ஆகியவை பரிமாறப்பட்டது. விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலய செயலாளர் சிமியோன் செல்வசிங், பொருளாளர் அருள்ராஜ், அசன விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், ஆபிரகாம், சி.எஸ்.ஐ. சேலம், ஈரோடு திருமண்டல உறுப்பினர் தியாபி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.