கூலித்தொழிலாளி மரணம் - சாதாரண வழக்காக மாற்றம்

நாகர்கோவில் அருகே கூலித்தொழிலாளி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொலை வழக்கு சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Update: 2024-04-24 04:26 GMT

வைகுண்டமணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழவிளை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (61). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பாஸ்கர் என்பவர் தென்னந்தோப்பில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரது முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது.  இது குறித்து தகவல் கிடைத்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியத்தனர்.    இது தொடர்பாக வைகுண்டமணியின் மகன் கதிரேசன் ராஜகமங்கலம் போலீசில் அளித்த  புகாரில் வைகுண்டமணி இறப்பு தொடர்பாக பாஸ்கர் மீது சந்தேகம் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நேற்று வைகுண்டமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வைகுண்ட மணி இறப்பு கொலை அல்ல என்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிர் இழந்து இருக்கலாம் என  டாக்டர்கள் தெரிவித்ததாக  போலீசார் கூறினர்.  இதனால் வைகுண்ட மணி கொலை வழக்கு சாதாரண வழக்காக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து வைகுண்டமணி உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.   இது சம்மந்தமாக போலீசார் கூறுகையில், வைகுண்ட மணி தரப்பினர் தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று, அவர்கள் விருப்பப்படும் தனியார் டாக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான அனுமதி பெறலாம் என்று கூறினார்கள்.

Tags:    

Similar News