108 ஆம்புலன்சில் பிரசவம், தாயும் சேயும் நலம்

தஞ்சாவூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2023-10-22 06:25 GMT

குழந்தையுடன் 108 ஊழியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலிதேவிக்கு சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவர் ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி தேவிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஓட்டுநர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பர கண்ணன் அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மீண்டும் ஆம்புலன்ஸ் தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர். உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News