குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவு வீச்சு - அபராதம் விதித்த நகராட்சி
கொல்லங்கோடு அருகே குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவை வீசியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.;
நகராட்சி அலுவலகம்
நித்திரவிளை அருகே உள்ள நம்பாளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள இறைச்சி கழிவுகளை அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கொட்டி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஒருவர் மதிய வேளையில் இறைச்சி கழிவுகளை கொண்டு சென்று குடியிருப்பு பகுதிக்குள் கொட்டி சென்றுள்ளார்.
இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவர் கொட்டி சென்ற கழிவுகளை அள்ளிஎடுக்க செய்து அந்த கடைமுன் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொல்லங்கோடு நகராட்சிதுறையினர் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.