ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் மூன்றாம் திருநாளான இன்று ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Update: 2024-01-11 10:14 GMT

விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எண்ணை காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணைக் காப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் திருநாள் இன்று திருசக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார் பின்பு நீராட்டு நடைபெறும்.

குறிப்பாக எண்ணெய்க்காப்பு உற்சவத்தின்போது ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்டப்படும் எண்ணெயானது தாழம் பூ, மகிழம் பூ, வெட்டிவேர் உள்ளிட்ட மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு ஸ்ரீஆண்டாள் சாற்றுவது வழக்கம். தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஆறாம் திருநாளன்று கூடாரவல்லி என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் பிரசித்தி பெற்ற மூக்குத்தி சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமுக்குளம் குளக்கரையில் அமைந்துள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News