தடைகால முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஏமாற்றம்

பேராவூரணியில் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீன்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத்தால் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2024-06-17 14:13 GMT

பேராவூரணியில் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீன்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத்தால் ஏமாற்றமடைந்தனர்.


தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.  மீன், நண்டு, கணவாய் உள்ளிட்டவை கிடைக்காமல் எதிர்பார்த்ததைவிட, இறால் அதிகமாக கிடைத்தும்,போதிய விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர் .தஞ்சை மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை  கணக்கில் கொண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 விதிமுறைகளின் படி ஆண்டுதோறும் மீன்பிடித் தடைகாலம்  அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் அமலில் இருந்தது. தடைக்காலம் முடிந்து தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் உள்ள 148 விசைப்படகுகளில் 135   க்கும் மேற்ப்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று நேற்று காலை கரை திரும்பினர்.

தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவுகூட மீன், நண்டு, கணவாய் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததைவிட அதிகமாக இறால் கிடைத்தும் போதிய விலை இல்லாததால்  ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் கூறியது, 61  நாட்களுக்குப்பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மீன், நண்டு, கணவாய் உள்ளிட்டவை மீனவர்கள் வலையில் சிக்கவில்லை. இறால் மட்டும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைத்தும் போதிய விலை இல்லாததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். சராசரியாக ஒரு விசைப்படகு கடலுக்கு சென்றுவர டீசல்,சம்பளம் உள்பட ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது.ஆனால் இன்று கரை திரும்பிய அனைத்து விசைப்படகுகளுக்கும் 100 கிலோ இறால் கிடைத்தும் தலா ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவாகவே  வருவாய் வந்துள்ளது. இறால் நிறுவனத்தினர் வழக்கமாக கிலோ ரூ.450 விலைக்கு எடுக்கும் ஏற்றுமதி இறாலை மீனவர்கள் வலையில் அதிக அளவு இறால் சிக்கியதால் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ரூ 250 விலை நிர்ணயம் செய்து விட்டனர்.

உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் நஷ்டம் அடைவதும் ஏற்றுமதி நிறுவனத்தினர் கோடிகோடியாக லாபம் பார்ப்பதும்தான் வழக்கமாக நடக்கிறது. ஏற்கனவே கடனில் உள்ள மீனவர்கள் மேலும் கடனில் மூழ்கும் நிலைதான் உள்ளது .இதற்கு நிரந்தர தீர்வுகான  அரசு குளிர்பதன கிட்டங்கி  அமைத்து கொடுத்தால்  அதில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும்.தமிழக முதல்வர் மீனவர் வாழ்வு மேம்பட உடனடியாக மீன்பிடி துறைமுக பகுதியில் அரசு குளிர்பதன கிட்டங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தடைக்காலத்திற்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்று திரும்பியுள்ளதால் ஏராளமாக மீன்கள் கிடைக்கும் என்று திரளாக அதிகாலையில் கூடிய அசைவப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர்.

Tags:    

Similar News