ஊட்டியில் கன மழை: சாலையில் வெள்ளம்

நீலகிரியில் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததால் மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2024-06-17 16:58 GMT

பெருக்கெடுத்து ஒடும் மழைநீர்

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் நீலகிரி உள்பட பல இடங்களில் தீவிரமாக பெய்தது. நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழை பாதிப்பு குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 21-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இயல்பை விட ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நீலகிரியில் நேற்றும், இன்றும் கனமழை பெய்தது.

ஊட்டியில் இன்று மதியம் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் ஊட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கின்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன. ரயில்வே காவல் நிலையத்தை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

அருகில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஊட்டி ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகள் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. இதேபோல் கனமழை காரணமாக ஊட்டி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் ஒரு சில காய்கறிகள், பழங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியது.

ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள நடைபாதையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மழை காரணமாக படகு இல்லத்தில் ஒரு மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தாவரவியல் பூங்காவில் குடைகளை பிடித்தபடி சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி வந்தனர். இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளான குன்னூர், கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசாக மழை பெய்தது. இதேபோல் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

Tags:    

Similar News